<$BlogRSDURL$>

Sunday, March 28, 2004

ஆல்ப்ஸ்


வானின்சுவர் முட்டுமட்டும் வளர்ந்த ஆல்ப்ஸ் மலை
மானுடமே கண்டுமகிழ இதியற்கை விரித்த வலை

வெள்ளைப்பனி மேலாடை பச்சைமரம் கீழாடை
உருகிவரும் பனியாலே உடல்முழுதும் நீரோடை

மலையுடலில் ஊர்ந்துசெல்ல அமைந்த இரயில் பாதை
அழுத்தம் மிகக்குறைவதனால் அடைத்திடுமே காதை

சிகரம்தொட கம்பிமீது சிறுமிதவைப் பயணம்
சின்னதாக இடறிவீழ்ந்தால் செலவிலா மயானம்

உயிர் நரம்பை ஊடுறுவும் குளிர்ந்த பனிக் காற்று
உடைகள்பல அணிந்து நீயும் உனதுருவம் மாற்று

உச்சிமலை சென்றடைந்தோம் உறையும்பனி கண்டுகொண்டோம்
அருகிலுள்ள நாடுகளும் தெரியவர மகிழ்ந்து நின்றோம்

பனியுருகி மலையொழுகி அமைந்த ஏரிப்பரப்பு
நாற்புறமும் கரைகளென மலையமை வதுமிதன் சிறப்பு

பசும்போர்வை விரித்ததுபோல் மலையடியின் தோற்றம்
மாடுகளும் குதிரைகளும் புல்மேய்ந்திதைப் போற்றும்

ஆகமொத்தம் இயற்கையெழில் கொஞ்சும் ஆல்ப்ஸ்மலை
அத்தனை அழகும் சொன்னேன் ஏதிதற்கு விலை?

- ஜெர்மனியின் தென்பகுதி ஆல்ப்ஸ் மலை, சுக்ஸ்பிட்ஸ் சிகரம்.

|

Saturday, March 27, 2004

மீண்டும்

காதல் வாங்கப்போன நானும் காயம் வாங்கினேன்
கனவு வரும் என்றுதானே இரவில் தூங்கினேன்
நினைவுச்சுமைகள் விழிகள் அழுத்த விடியல் ஏங்கினேன்
சிறகு முறிந்து வீழ்கையில் என்னை நானே தாங்கினேன்
|

Thursday, March 25, 2004

கற்பனை


கனவுகளைச் சேகரித்து கவிதைகளைச் சமைத்தேன்
கவிதைகளைச் சேகரித்து காதலிக்குக் கொடுத்தேன்
கண்களிலே காதலுடன் கவிதைகளைக் கண்டாள்
கவினிலவைப் பரிசாக எனக்குமட்டும் தந்தாள்

*

காதலெனும் பூப்பறிக்க நானும் சென்ற நேரம்
கன்னியவள் அங்கில்லை எந்தன் நெஞ்சில் பாரம்
எழுதிவைத்த கவிதையெல்லாம் சிந்தும் விழி ஈரம்
பழுதடைந்த என்மனது எவ்விடத்தைச் சேரும்?

|

Wednesday, March 24, 2004

தனிமை

பசுமையான மரங்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன. பூச்சிகள் எழுப்பும் ஒலியும் பறவைகளின் குரலும் வானவூர்தியின் காற்றுக்கிழிதல் ஓசையும் என்னுடனிருந்தன. நேற்றுப்பெய்த மழையின் ஈரம் நிலத்தில் தங்கி மண்ணின் வாசமும் புல்லின் வாசமும் காற்றில் கலந்து வானம் தொடுகின்றன. எங்கோ தொலைவில் கேட்கும் மணிச்சத்தத்தில் நான் கலைகிறேன். இந்த உலகம் முழுதும் பரவியிருந்த உன் நினைவுகளுடன் நான் தனித்திருக்கிறேன். ஓசையில்லாமல் புல்லில் நடக்கும் சிட்டுக்குருவியின் சிறகு படபடத்து உயரே கிளம்புகின்ற பொழுதுகளிலும் நெடிய மௌனம் கலைத்து காற்றில் உராயும் இலைகளின் நேரங்களிலும் நான் தொலைகிறேன். என்னுள் உன் அதிர்வுகள் ஆழமாய்ப் புதைந்து கிடக்கின்றன. சடுதியில் கண்முன் ஆடிமறையும் சின்னஞ்சிறு பூச்சியின் நொடியில் மனம் இலயிக்கிறது. தொடுவானின் விளிம்பில் பார்வையைத் தொலைத்து வானவில்லின் வண்ணங்களோடு நான் கலந்து கொண்டிருந்தபோது இந்த உலகத்தின் ஒலிகளெல்லாம் உறங்கச் சென்று கொண்டிருந்தன.ஒலியெழுப்பாமல் வந்து ஒளி சிந்திக்கொன்டிருக்கும் நிலவை அவ்வப்போது மூடி விலக்கும் மேகக் கூட்டங்களுக்குள் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

- இஸார் நதியின் அருகே அமைந்த வனப்பகுதி(ஜெர்மனியின் மியூனிக் நகர் ).

|

Tuesday, March 23, 2004

பிரக்ஞையின்றி

எப்போதும் எனக்கு நிழல் தந்து கொண்டிருக்கும் வேப்ப மரத்தினடியில் நான் அமர்ந்திருந்த போதுதான் தொடுவானின் கீழ் நீ தெரிகிறாய். உன்னை நோக்கி நான் வந்து கொண்டே இருக்கிறேன். வேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் இடையே எதிர்ப்பட்ட வேகத்தடை நீ. நின்று போன இயக்கம் சலனத்துடன் மீண்டும் நகரத் துவங்குகிறது. செல்லரித்துப் போன பக்கங்களில் வரலாறு இன்னும் மீதமிருக்கின்றது. புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டிப் புரட்டி விரல் ரேகைகள் அழிந்து போகின்றன. எனது அறையின் ஜன்னலை அகலமாய்த் திறந்து வைத்து கண்களை மெதுவாய் மூடுகிறேன். கண்களுக்குள் வெளிச்சமாய் நீ விரிகிறாய்.மேற்கு நோக்கி வேகமாய் நகரும் மேகக் கூட்டங்கள் தொடுவானில் மறையுமுன் ஒருதுளி நீரை என் கண்ணுக்குள் தெளித்து நகர்கின்றன. நீர்த்துளிகள் காய்வதற்குள் நான் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன். மழைத்துளியின் மெல்லிய கம்பிகளைப் பிடித்து வானில் ஏறுகின்றேன். வானவீதியின் குறுகலான சந்திற்குள் ஓடிக்கொண்டிருக்கிறேன். மலைமுகட்டில் கால் தடுக்கி வேகமாய்க் கீழ் நோக்கி இழுக்கப் படுகிறேன்.எரிந்து விழும் விண்மீனைக் கரைத்து வாசலில் தெளிக்கிறேன். அயன மண்டலத்தின் மின் காந்த அலைகளுடன் கலந்து போகிறேன். வேர்களின் உள்ளே ஊடுருவி வேர்முண்டுகளுக்குள் புதைந்து போகிறேன். கடிகாரத்தின் முட்களோடு சேர்ந்து சுற்றுகிறேன். இரவு நேர நிலவொளியைப் பறித்துப் பருகுகிறேன்.சில்வண்டுகளின் ரீங்காரத்தில் ஒலியாய் மாறுகிறேன். கனவுகளுடன் கைகுலுக்கி நனவுலகம் தொலைக்கிறேன். நினைவுகளின் நீட்சியைக் கூர்வாள் கொண்டு அறுக்கிறேன். நேற்றைய நினைவுகளுடன் எதிர்காலத்தில் பயணிக்கிறேன். இந்த உலகம் தொலைவில் சுற்றி மறைய, விழிகளில் உன் நினைவோடு நான் வேற்று கிரகத்தில் வெறுமையாகிறேன்.
|
சில வருடங்களுக்கு முன் எழுதியது

வலை போற்றி


மின்னஞ்சல் வழியாக என் நெஞ்சை அனுப்புகிறேன்
தொலைந்து விடும் பயமில்லை தொலைதூரம் தடையில்லை

விரலசைவின் ஒரு நொடியில் உலகமெலாம் ஒரு திரையில்
ஈடு இணை இதற்கில்லை வானங்கூட எல்லையில்லை

அறிவியலா பொறியியலா அனைத்துலகச் செய்திகளா
உலக வலைப் பின்னலிலே பல கலைகள் கண்ணெதிரே

கன்னியர்க்கு வலைவிரித்து காளையர்கள் அலைந்தது போய்
கணினியிலே வலைவிரித்து களிப்புறும் காலமிது

மென்பொருள் பொறியியலார் பெரும்பொருள் ஈட்டுகின்றார்
சுட்டியை விரலால் தட்டி செப்புவித்தை காட்டுகின்றார்

மாறிவரும் உலகினிலே மற்றதெல்லாம் மாறினாலும்
மனதுகொண்ட நேசம் மட்டும் மாறிவிடக் கூடாது!



|
தமிழில் எழுதும் தணியா ஆசை

சோதனைப் பக்கமிது
|

This page is powered by Blogger. Isn't yours?